சென்னை: குற்றம்சாட்டப்பட்டவர்களை ரிமாண்ட் செய்யும் போது இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது என்று மாஜிஸ்திரேட்டுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றச்சாட்டுகள் எழுந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நக்கீரன் நாளிதழில் அக்டோபர் மாதம் செய்தி வெளியானது. அதில், ஆளுநருக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வார இதழின் ஆசிரியர் கோபால் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆனால் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத், கோபாலை நீதிமன்ற காவலில்(ரிமாண்ட்) அனுப்ப மறுத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து போலீஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘எழும்பூர் மாஜிஸ்திரேட், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க மறுத்து உத்தரவிட்டது சரிதான். போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார். தீர்ப்பில் நீதிபதி கூறும்போது, ‘‘வழக்கின் தன்மையை பொறுத்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். இயந்திரத்தனமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது. இந்த உத்தரவை அனைத்து மாஜிஸ்திரேட்டுகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். இதன் நகல் டிஜிபிக்கு அனுப்பப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி