சென்னை: நக்கீரன் கோபாலை சிறையிலடைக்க முடியாது என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவு சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை சம்மந்தப்படுத்தி நக்கீரன் இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. இதனை அடுத்து ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பெயரில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, அன்று மாலை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத், பிரிவு 124ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று மறுத்தார்.
அவர் மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாக போடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நக்கீரன் கோபாலை சிறையலடைக்க முடியாது என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவு சரிதான் என்று கூறியுள்ளார். மேலும், ஒருவரை கைது செய்வதற்கு உள்ள விதிகளை சரியாக கடைபிடித்துள்ளதாக எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி கோபிநாத்க்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி