கொடைக்கானல்: அரையாண்டு, பண்டிகை விடுமுறை முடிந்த பின்னும் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமிருக்கிறது. பகலில் வெயிலும், இரவில் கடும் குளிருமாக சுற்றுலாப்பயணிகளை வானிலை கவருகிறது. ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து இருந்தனர். மேகமூட்டம் இல்லாமல் இருந்ததால் தூண் பாறை பளிச்சென்று தெரிந்தது. இதை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதேபோல் ‘க்ரீன் வேலி வியூ’ எனப்படும் தற்கொலை முனை பகுதியிலும் மேக மூட்டம் இல்லை. பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய சுற்றுலா இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் வியாபாரம் களைகட்டியது. அரையாண்டு விடுமுறை முடிந்தப் பிறகும், வார விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
தற்போது பகல் நேரத்தில் வெயில் நிலவும் நிலையில், மாலையிலும், இரவு நேரத்திலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சூழல் சுற்றுலாப்பயணிகளுக்கு இதமாக இருக்கிறது. மாலையில் நிலவிய குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி செய்து, கொடைக்கானல் அழகையும் கண்டு ரசித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி