பனாஜி: ‘கோவா முதல்வர் பாரிக்கரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. கோவா முதல்வராக இப்போதுள்ள மனோகர் பாரிக்கர், முதலில் மோடி தலைமையிலான மத்திய அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான், பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஊழல் தொடர்பான ஆடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா சமீபத்தில் வெளியிட்டார். அதில், கோவா மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் பிரதாப் சிங் ரானேவின் பேச்சு இடம் பெற்றுள்ளது.
அதில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தனது படுக்கை அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக மனோகர் பாரிக்கர் எங்களிடம் கூறியுள்ளார்’ என அவர் கூறுகிறார். இந்த ஆடியோ வெளியானதும், ‘ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல. நான் யாருடனும் அப்படி பேசவில்லை’ என பிரதாப் சிங் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோவா மாநில காங்கிரஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ‘ரபேல் ஆவணங்கள் வெளியாகி விடக்கூடாது என சிலர் விரும்புகின்றனர். அவர்களால் பாரிக்கர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி