×

பாரிமுனை, பெரம்பூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் அதிரடி சோதனை பிரபல கடையில் இருந்து 5 டன் பிளாஸ்டிக் 2 டன் காலாவதி உணவு பொருள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பூர்: பாரிமுனை, பெரம்பூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பிரபல கடையில் இருந்து 5 டன் பிளாஸ்டிக், 2 டன் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டது.சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை மண்டல அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மண்டல சுகாதார அதிகாரி ஹேமமாலினி ஆகியோர் தலைமையில்  மாநகராட்சி ஊழியர்கள் அங்குள்ள துணிக்கடைகள், பேன்சி ஸ்டோர், இனிப்பு பலகார கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.அப்போது அங்கு இருந்த அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இதேபோல், 5வது மண்டல சுகாதார அதிகாரி கவுசல்யா தலைமையில் பாரிமுனை, மலையபெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, மண்ணடி, பிராட்வே, ஏழுகிணறு, கொத்தவால்சாவடி, எஸ்என்சி போஸ் ரோடு ஆகிய பகுதிகளில்  துப்புரவு அலுவலர் மாப்பிள்ளை, சுப்புராயுலு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், வணிக வளாகங்கள், கடைகளில் தீவிர சோதனை நடத்தி பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, பைகள் உள்ளிட்ட 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்தனர்.

6வது மண்டல சுகாதார அதிகாரி சரஸ்வதி தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் பெரம்பூரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பல் பொருள் அங்காடியில் இருந்து குவியல்  குவியலாக பிளாஸ்டிக் கவர்கள், தட்டுகள், டம்ளர்களை பறிமுதல் செய்தனர். அந்த கடையில் மட்டும் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.மேலும், அங்கிருந்த உணவு பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த குளிர்பானங்கள், சாக்லெட்கள், துரித உணவுகள் காலாவதியானதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுமார்  2 டன் அளவுக்கு காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சோதனை சுமார் 4 மணிநேரம் நடந்தது.

இதேபோல் கொளத்தூர், திருவிக.நகர், புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்தனர்.ஆலந்தூர்:ஆலந்தூர் மண்டல உதவி ஆணையர் ராமமூர்த்தி   உத்தரவின்பேரில், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சேது, கீதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன் ஆகியோர்  ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர்,  ஆலந்தூர் போன்ற பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், துணிகடைகள் போன்ற  200க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்து, விற்பனைக்காக வைத்திருந்த  1 டன் எடையுள்ள  பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : store ,areas ,Tondiarpet ,Perambur , Parimunai, Perambur ,Tondiarpet,plastic,famous stor,municipal authorities ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!