திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையின்றி 160 பயணிகள், ஏர் ஏசியா விமானம் மூலம் கோலாலம்பூர் பயணம் செய்ததை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பாக சுங்க அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனையிடுவது வழக்கம். இந்நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றி வரும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை கடந்த மாதம் டிசம்பர் 31ம் தேதியோடு காலாவதியானது. இந்நிலையில் புதுப்பித்த அடையாள அட்டையை விமான நிலைய ஆணையம் இதுவரை வழங்காததால், அதிகாரிகள் பழைய அடையாள அட்டையையே பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து உரிய அடையாள அட்டை இல்லை எனக்கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிகாரிகளை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விமான நிலைய வருகை பகுதியின் வாயிலில் காத்துக் கொண்டிருந்தனர். மேலும் பயணத்தை மேற்கொள்ள குடியெற்றுத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து, திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளை அந்நிறுவனத்தின் மேலாளரே சோதனை செய்து அனுமதித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, சுங்கத்துறையிடம் இருந்து சட்டப்படி ஏர் ஏசியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஏர் ஏசியா நிறுவனம் அபராதம் செலுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சுங்கத்துறை மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி