×

மலப்புரம் அருகே மாவோயிஸ்ட் நடமாட்டம்: துப்பாக்கியுடன் ஊருக்குள் புகுந்து அரிசி, பொருட்களை பறித்து சென்றனர்

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே மீண்டும் துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் நள்ளிரவில் ஊர்மக்களை மிரட்டி அரிசி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர். கேரளாவில் கண்ணூர், வயநாடு, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் கண்ணூர், அம்பாயத்தோடு பகுதியில் பெண் உள்பட 4 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பி பிட் நோட்டீஸ்களை வீசி சென்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மாவோயிஸ்ட் தீவிரவாதி மைதீன் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் வந்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்ய அதிரடிப்படை போலீசார் கண்ணூர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதேபோல் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு பகுதியிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் வழிக்கடவு பகுதியில் துப்பாக்கி ஏந்திய 3 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் ஊர்மக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து அரிசி மற்றும் பொருட்களை பறித்து சென்றனர். இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : move ,Maoist ,Rice ,Malappuram ,town , Malappuram, Maoist movement
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்