சென்னை: அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், கதிரேசன் தெருவை சேர்ந்த குமார் (37) என்பவர், பெரும்புதூரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த 11ம் தேதி குமார், வீட்டின் படுக்கை அறை கட்டிலில் உள்ள லாக்கரில் 27 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சத்தை வைத்துள்ளார். நேற்று காலை பணம் எடுப்பதற்காக கட்டிலில் உள்ள லாக்கரை திறந்தபோது, அதில் இருந்த பணம், நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* சோழவரம் கோட்டைமேடு அம்பேத்கர் தெருவை சேர்ந்த தேவி (38). வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், தேவி கழுத்திலிருந்த 5 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர்.
* கரூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி (32) தாம்பரம் அடுத்த சேலையூரில் தங்கி ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான அழைப்பிதழை அவரது உறவினர்களுக்கு கொடுப்பதற்காக அவரது மாமா மற்றும் சித்தப்பா சென்றபோது விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்து விட்டதாகவும், அதனால் அவரது திருமணம் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முரளி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டையை சேர்ந்த அரவிந்த் (31) பீர்க்கன்காரணையில் தங்கி பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை அரவிந்த் காதலிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஜாதகம் பொருந்தவில்லை என திருமண முடிவு கைவிடப்பட்டது. இதனால் மனமுடைந்த அரவிந்தன் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
* மாதவரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூரை சேர்ந்த விவேக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
* வியாசர்பாடியை சேர்ந்த லலிதா (40) நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் லலிதா கழுத்திலிருந்த 5 பவுன் சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் ராணுவ வீரர்கள் வீட்டுவசதி சங்கம் சார்பில், 30 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணி நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கட்டிடத்தில் கடைசி கட்டமாக வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த சந்தோஷ் குமார் (28), அவரது மனைவி பீலாதேவி (22) ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இருவரும் 19வது மாடியில் தரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பீலாதேவி 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி