அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையின் மேற்கூரைகள் உடைந்து, தற்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் பகுதியாக மாறியுள்ளது. இதை சீரமைப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். சென்னை அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில், கள்ளிக்குப்பம் பகுதியில் ஒரு பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த நிறுத்தத்தை கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர், வி.பி.நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி மக்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்து மூலம் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக, இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் இருக்கையுடன் மற்றும் மின்விளக்குகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிழற்குடையை சென்னை மாநகராட்சி அமைத்தது. இப்பேருந்து நிழற்குடையை மாநகராட்சி முறையாக பராமரிக்கவில்லை. இதனால் இங்குள்ள மேற்கூரை, பயணிகள் இருக்கை மற்றும் மின்விளக்குகள் அனைத்தும் உடைந்து சிதறிவிட்டன.
மேலும், வானம் பார்த்த பூமியாக திகழும் பேருந்து நிழற்குடையை தற்போது குடிமகன்கள் ஆக்கிரமித்து மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் ஏறவரும் இளம்பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுகின்றனர். செல்போன் மற்றும் நகை பறிக்கும் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், நிழற்குடையின் உட்பகுதியில் உடைந்த அலங்கார விளக்கு பகுதிகளில் அரசியல் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறிவிட்டது.
இந்த நிழற்குடையின் மேற்கூரை மற்றும் உடைந்த இருக்கை மற்றும் மின்விளக்கு வசதிகளை மீண்டும் சீரமைத்து தரும்படி அம்பத்தூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். எனினும், இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, கள்ளிக்குப்பம் பஸ் நிறுத்த நிழற்குடையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி