*9வது ஆண்டாக தொடருது சேவை
பட்டிவீரன்பட்டி : சபரிமலையில் நடந்த மண்டல பூஜை விழாவில், ஐயப்பன் சுவாமிக்கு அணிவிக்க தங்க அங்கியை பட்டிவீரன்பட்டி பக்தர் சுமந்து சென்றார்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர் ராமையா (55). இவர் 12 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களில், அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு சார்பில் எமர்ஜென்சி பிரிவில் சேவை செய்து வருகிறார். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவர். அந்த சமயத்தில், பக்தர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, உயிரிழக்க நேரிட்டாலோ உதவுவது இப்பிரிவின் பணியாகும்.
இவரது இப்பணிக்காக மண்டல பூஜையின்போது ஐயப்பன் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை, சுமந்து வரும் வாய்ப்பை அகில பாரத ஐயப்பா சேவா சங்க அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது. இவர் நேற்று நடந்த மண்டல பூஜை விழாவுக்காக தங்க ஆபரண பெட்டியை சுமந்து சென்றார். இதுகுறித்து ராமையா கூறுகையில், ‘நான் சபரிமலையில் தொடர்ந்து செய்து வருகின்ற சேவைக்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமக்கும் அரிய பாக்கியத்தை வழங்கியது. தொடர்ந்து 9வது முறையாக இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை என் வாழ்நாள் பாக்கியமாக எண்ணுகிறேன். என் ஆயுள் முழுவதும் இச்சேவையை செய்வேன். என்னுடன் விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரும் தங்க அங்கியை சுமந்தனர்,’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி