×

பாளையங்கோட்டை அருகே பயங்கரம் ஜவுளிக்கடை ஊழியர், தாத்தா சரமாரி வெட்டிக் கொலை: முன்விரோதத்தில் கும்பல் வெறிச்செயல்

செய்துங்கநல்லூர்: பாளை அருகே வேலை முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஜவுளிக்கடை ஊழியரையும், அவரது தாத்தாவையும் மர்மக்கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது.  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே பக்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி (65). ஐஸ் வியாபாரி. இவரது மனைவி பட்டம்மாள். இவர்களின் மகன் ராமையா அருகேயுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். மகள்கள் சத்யா, கவிதா. மகன் சுடலைமணி (18). இவர்களில் சத்யா திருமணமாகி அதே ஊரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில்  கவிதா, தூத்துக்குடியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள சுடலைமணி, நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவார். வழக்கம்போல் நேற்று பணி முடித்து டவுன் பஸ்சில் ஏறிய சுடலைமணி இரவு 10 மணியை கடந்து விட்டதால் தாத்தா முத்துசாமிக்கு போன் செய்து பக்கப்பட்டி பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கும்படி கூறினார். அதன்படி முத்துசாமியும் அங்கு சென்று காத்திருந்தார்.

  சிறிது நேரத்தில் பஸ்சிலிருந்து சுடலைமணி இறங்கும்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. அவர்களிடம் இருந்து உயிர்பிழைக்க சுடலைமணி தலைதெறிக்க ஓடினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துசாமி, அந்த கும்பலை விரட்டிச் சென்று தடுத்து தனது பேரனை விட்டு விடும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், முத்துசாமியை சரமாரியாக வெட்டியது. பின்னர் சுடலைமணியையும் ஓட ஓட விரட்டி வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதில் தாத்தா, பேரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.  முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் கொலையான முத்துசாமி தரப்பினருக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் உளள் முன்விரோதத்தில் இருவரையும் சேர்த்து மர்மக் கும்பல் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. சுடலைமணி காதல் விவகாரத்தில் சிக்கியதால் எதிர்தரப்பினர் பஸ்சில் பின்தொடர்ந்து வந்து தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இரட்டைக் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Palayamkottai Thousand Worker ,Grandfather Saratri Vettik , Terror,Palayamkottai Thousand Worker, Grandfather Saratri Vettik murder, Mob violence in front
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...