கும்பகோணம்: தமிழகத்திலுள்ள கோயில்களில் உள்ள சிலைகள் போதுமான பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான சிலைகள் திருட்டு போனது. இதனையடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார், திருட்டு போன சிலைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்,பாதுகாப்பாற்ற நிலையிலுள்ள கோயில்களில் உள்ள சிலைகளை மீட்டு, பாதுகாப்பான மையத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கோயிலின் மூலவர் சன்னதி அருகில் கட்டப்பட்டு, தற்போது மீட்கப்படும் சுவாமி சிலைகளை மையத்தில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.
கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகமான கோயில்கள் இருப்பதால், மேலும் சில உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டப்படவேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி தலா ரூ. 50 லட்சம் மதிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலிலும், திருநாகேஸ்வரம் கோயிலிலும் அனைத்து வசதிகளுடன் , நவீன முறையில் பாதுகாப்பான வகையில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது அனைத்து சிலைகளையும் அந்தந்த கோயில்களிலேயே பாதுகாப்பான வகையில் நவீன பாதுகாப்பு வசதி செய்து பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் கட்டப்பட்ட உலோக திருமேனி பாதுகாப்பு மையம் பராமரிக்கப்படாமல் இருப்பதால், மையத்தை சுற்றிலும் முட்செடிகள், மரங்கள் முளைத்து ,உள்ளே செல்ல முடியாதளவிற்கு உள்ளது. இரவு நேரங்களில் விஷஜந்துக்கள், பாம்புகள் உள்ளிட்டவைகள் நடமாட்டம் உள்ளதால், கோயில் பணியாளர்கள் மையத்தின் அருகில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பல லட்ச ரூபாய் மதிப்பில் , கட்டி பராமரிக்கப்படாமல், பயனற்ற நிலையில் இருக்கும் மையத்தை உடனடியாக சுத்தப்படுத்தி சீர் செய்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி