×

உக்ரைனில் நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது : அதிபர் பெட்ரோ அறிவிப்பு

கீவ் : ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதையான கெர்ச் ஜலசந்தி பகுதியை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பொதுவான பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய ராணுவம் கூறியிருந்தது.

இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷ்ய எல்லையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கம் வகையிலான ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டம் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக இந்த சட்டம் அமலில் இருந்த நிலையில், நாட்டின் எல்லை பிராந்தியங்களில் அமலில் உள்ள ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் பெட்ரோ போரோஷென்கோ அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பான அனைத்து கூறுகளையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ukraine , Ukraine,Military law,President Petro Poroshenko
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு