சென்னை: சென்னையில் உள்ள பெரிய நீர் வழிப்பாதைகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரம் பூச்சி தடுப்பு துறையின் மூலம் கொசு ஒழிப்பு பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், பெரிய நீர் வழிப்பாதைகளில் கொசுப்புழு அடர்த்தியாக உள்ள இடங்களை ஆய்வு செய்து தலைமையிடத்திற்கு வாராந்திர அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 3,300 பூச்சி தடுப்பு பணியாளர்களின் மூலம் 587 கைத்தெளிப்பான்கள், 15 விசை தெளிப்பான்கள், 23 சிறியரக புகைபரப்பும் இயந்திரங்கள், 312 புகைபரப்பும் இயந்திரங்கள் மற்றும் 39 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைபரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ளவும், கொசுப்புழு அடர்த்தியை துல்லியமாக கணக்கிடவும் வலைதள முறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் நீர் வழிப்பாதைகளில் வளரும் கொசுப்புழு அடர்த்தியை உயர் துல்லிய கையடக்க சாதனம் மூலம் துல்லியமாக கணக்கிட்டு உடனுக்குடன் நேரடியாக தெரிந்துகொள்ளும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. வலைதள அடிப்படை முறையில் கொசுப்புழு அடர்த்தியின் அளவு பருவநிலைகேற்ப துல்லியமாக கணக்கிட்டு, அதன் விவரங்களை பதிவு செய்து தேவையான இடங்களில் கொசு ஓழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணியில் 2 பணியாளர்களும், ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் 4 முதல் 8 பணியாளர்ளும் ஈடுபட உள்ளனர். இதைத் தவிர்த்து 15 மண்டலங்களில் உள்ள 234 கி.மீ நீர் வழிப்பாதையில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த 15 மேற்பார்வையாளரின் தலைமையில் 59 கைதெளிப்பான்கள் மற்றும் 125 பணியாளர்களை கொண்டு ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். இத்தொழில்நுட்பம் வரும் காலங்களில், சிறிய கால்வாய்கள், குளங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களிலும் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி