பெலகாவி: ‘கொஞ்சம் கூட அறிவில்லை’’ என்று பாஜ எம்பி.க்கள் பிரபாகர் கோரே மற்றும் சுரேஷ் அங்கடி வார்த்தைகளால் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம் பெலகாவியில் ரயில்வே மேம்பால திறப்பு விழா நடந்தது. பாஜ எம்பிக்கள் சுரேஷ் அங்கடி, பிரபாகர் கோரே உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தனர். விழா தொடங்கும் நேரத்தில் மேடைக்கு வருமாறு பிரபாகர் கோரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டாலும் பிரபாகர் கோரே மேடைக்கு செல்லவில்லை. அழைப்பிதழில் அவரின் பெயர் இடம் பெறவில்லை என்பதே இதற்கு காரணமாகும். இதற்கிடையே, சுரேஷ் அங்கடி கீழே இறங்கி வந்து, “கொஞ்சம் கூட அறிவில்லை’’ என கூறிக்கொண்டே அவரை மேடைக்கு அழைத்து செல்வதற்கு முயற்சி செய்தார். ‘‘மேடைக்கு நான் வரவில்லை’’ என மறுத்த பிரபாகர் கோரே, “தாதா போல் ஏன் நடந்து கொள்கிறீர்கள்?’’ என ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
பொதுமக்கள் முன்னிலையில் பாஜ எம்பிக்கள் இரண்டு பேர் நடந்த கொண்ட விதம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது பிரபாகர் கோரே அருகில் அமர்ந்து இருந்த அமைச்சர் சதிஷ் ஜார்கிஹொளி இரண்டு பேரையும் சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்தார். ஆனாலும் கடைசி வரை பிரபாகர் கோரே சமாதானம் அடையவில்லை. ரயில்வே மேம்பால திறப்பு விழாவில் பாஜ எம்பிகள் இடையே நடந்த காரசார விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி