சென்னை: கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விஏஓக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை:
கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் மேற்கொண்டு இருப்பதால், புயல் பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கல் போன்ற பணிகளும் நடவடிக்கைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி