×

பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்காமல் போலி ஆவணம் தயாரிப்பு: திருச்சி சிறை எஸ்பி மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ெஜயச்சந்திரன் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சி பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து திருச்சி பெண்கள் சிறைக்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெண் கைதிகளுக்கு சிறையில் நாப்கின் வழங்கப்படாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.  இது தொடர்பாக  தாக்கல் செய்த அறிக்கையில், கரூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம்தான் நாப்கின் வாங்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவதாக சிறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முறையாக ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை; கைதிகளுக்கு நாப்கின் வழங்கப்பட்டதாக சிறை சூப்பிரண்டு ராஜலட்சுமி பதிவேடு தயாரித்து இருப்பது தவறானது.

நாப்கின் பெற்றுக்கொண்டதாக கைதிகள் எந்த பதிவேட்டிலும் கையெழுத்து போடவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை திருச்சி சிறையில் பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்கப்படாதது ஆவணங்கள் மூலம் தெரிகிறது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி கண்காணித்து இருக்க வேண்டும்.

ஆனால், அவர் அதை கவனிக்காமல் தனது கடமையில் இருந்து தவறி உள்ளார். இது கண்டனத்துக்கு உரியது. பெண் கைதிகளுக்கு நாப்கின் எதுவும் வழங்காமல், நாப்கின் வழங்கியது போன்று போலி ஆவணங்கள் தயாரித்த சூப்பிரண்டு ராஜலட்சுமியின் செயல்பாடு மனித உரிமை மீறல் ஆகும். எனவே, அவர் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் வளர் இளம்பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நகர்ப்பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tribunal ,women inmates ,State Human Rights Commission ,SSP , Female prisoner, napkin, fake document, state human rights commission
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...