சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து மக்கள் முன்னணி நிறுவன அமைப்பாளர் நாராயணன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாகவே சினிமா துறையில் இந்துமதக் கடவுள்கள், இந்து மத துறவிகளை விமர்சிப்பது, அவர்களை குற்றவாளி போல சித்தரிப்பது வாடிக்கையாக உள்ளது. எல்லா மதங்களிலும் தவறு செய்பவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்து மதத்தில் மட்டும் குற்றங்கள் நடப்பது போல் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
மாற்று மதத்தினரை நல்லவராகவும் சேவை செய்பவர்களாகவும் காட்டிவிட்டு இந்து மத துறவிகளை மட்டும் இழிவுப்படுத்திக் காட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை முழுவதும் “மஹா” திரைப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டியில் உள்ள நடிகை ஹன்சிகா துறவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற காட்சி இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இது போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடுவதால் உலக அளவில் இந்து மதத்தின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் காட்சி அமைத்த திரைப்பட இயக்குநர் ஜமீல் மீதும் திரைப்படத்தில் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி