×

‘குட்கா’ வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ‘குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்ற குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்கும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் பெற்றதாக “குட்கா டைரியில்” இடம்பெற்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.“குட்கா வழக்கில் வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் காணவில்லை” என்று உயர் நீதிமன்றத்திலேயே அடாவடியாக சத்திய பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள விவரத்தையே மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு தெரியாமல் மறைத்து டி.கே.ராஜேந்திரனுக்கு ஓய்வு பெற்ற பிறகும் இரு வருடம் பணி நீட்டிப்பு வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் ஊழல் டைரியில் இடம்பெற்றுள்ளதை மறைத்து, “சத்தியத்தை”க்(?) காப்பாற்றும் அந்த தலைமைச் செயலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் லஞ்ச பட்டியல் வழக்கிலும் விஜயபாஸ்கர் பெயரை சேர்க்காமல் அவரை சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் தப்ப விட்டுள்ளார்கள். அதையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. டி.ஜி.பி வீடு சி.பி.ஐ அதிகாரிகளால் சோதனையிடப்பட்டும் இன்றுவரை அவர் விசாரணைக்காக அழைக்கப்படாததும், குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள அவர் தமிழக காவல்துறைக்கு இன்னும் தலைமை தாங்குவதும், பயிரை மேய்ந்த வேலியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இந்நிலையில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள இந்த விசாரணை சிறிதும் தடம் மாறி விடாமல் சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதற்கேற்றபடி எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் சி.பி.ஐ அமைப்பிற்கு இருக்கிறது என்றும், அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் திராவிட முன்னேற்றக் கழகம் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்கு தயங்காது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர், “குட்கா அமைச்சரை” ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கறும் பறவைகள். ஆகவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமெனவும், குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலைசிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

ஒடிசா முதல்வர் கடிதம்

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற ஆதரவு அளிக்கக் கோரி மு.க.ஸ்டாலினுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர்கள் துரைமுருகனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் அமைச்சர் தேவி பிரசாத் மிஸ்ரா, சித்தாந்தா மகோபாத்ரா எம்.பி., ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள். அப்போது, நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற திமுக ஆதரவு அளிக்குமாறு கோரினார்கள். இந்த மசோதா நிறைவேறுவதற்கு ஓரணியில் நின்று போராட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். இதை வலியுறுத்தி திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலினுக்கு பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவரும் ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தையும் வழங்கினார்கள்.

திருநங்கைகள் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று மாலை தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது,  “மத்திய பாஜ அரசு கொண்டு வர இருக்கும் திருநங்கை மீதான மசோதாவில் உள்ள பல முக்கிய அம்சங்களை தவிர்த்து விட்டு, பெயரளவில் திருநங்கைக்காக ஒரு மசோதா கொண்டு வருவது” தொடர்பான கோரிக்கை மனு அளித்தனர். அப்போது தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.அருணா உடனிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,Vijayabhaskar ,probe ,Gudka ,CBI , DMK leader MK Stalin urges, minister Vijayabhaskar , appear before , CBI probe into 'Gudka'
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...