சென்னை : சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரன்வீர்ஷா, கிரண்ராவின் பாஸ்போஸ்ட் சிலை கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 200க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. இதனைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகள், பங்களாக்களிலும் சோதனை நடைபெற்றது. அதில் மண்ணில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவிற்கும் இதில் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ரன்வீர்ஷா, கிரண்ராவின் பாஸ்போர்ட்டை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ரன்வீர்ஷா, கிரண்ரா இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. 45 நாட்களாகியும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்காததற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோர் தங்கள் பாஸ்போர்ட்டை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிடம் ரன்வீர்ஷா, கிரண்ராவ் தங்களது பாஸ்போஸ்ட்டை ஒப்படைத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி