சென்னை: நாடு முழுவதும் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. யாருமே எதையும் பேச முடியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில், உண்மையில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். ஆனால் தமிழகத்தில், நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகள் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. அவருக்கும் அதுபோன்ற அழுத்தம் இருக்குமேயானால், அவரும் அதை தாங்கி கொண்டுதான் செயல்பட வேண்டும்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய மனதிலும் இருக்கக்கூடிய ஒன்று. அதே நேரத்தில், நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய்வதற்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை அவருக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
சீதக்காதி திரைப்படம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதேபோல் திரைப்படங்கள் வராமல் தடுக்க வழக்கு தொடர்வது வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்று திரைப்படங்களை வெளிவர விடாமல் தடுப்பதற்கு ஆரம்ப விழாவாக அமைந்தது என்னுடைய திரைப்படம்தான் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். படத்தை பார்த்துவிட்டு, அதில் ஏதாவது தவறான கருத்து இருந்தால், அதை தெரிவிக்கலாம். படம் வெளியாவதற்கு முன்பே, குற்றம் கூறினால், எதுவுமே யாரும் பேச முடியாது. தற்போது நாடு முழுவதும் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. யாருமே எதையும் பேச முடியவில்லை.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி