சென்னை : சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 200க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. இதனைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகள், பங்களாக்களிலும் சோதனை நடைபெற்றது.
போயஸ்கார்டனில் உள்ள அவரது தோழியான கிரண்ராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ரன்வீர் ஷாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நேர்மையாக சிலைகளை வாங்கியிருந்தால் அவற்றை ஏன் புதைத்து வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரன்வீர்ஷா, கிரண்ராவின் பாஸ்போர்ட்டை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாஸ்போர்ட் ஒப்படைப்பு தொடர்பாக மனுதாரர் கருத்தை அறிந்து தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 45 நாட்களாகியும் இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோர் தங்கள் பாஸ்போர்ட்டை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சிலை திருட்டு தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது முன்ஜாமீன் மீது நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி