×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை கேட்கும் கோரிக்கை: மீனவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் உரிமைக்கான கோரிக்கை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற மீனவர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்பதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளார். அதன்படி மீனவர்களிடம் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதல் கருத்துகேட்பு கூட்டம் தமிழக மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் எம்.கஜநாதன் தலைமை வகித்தார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் டி.என்.பிரதாபன் முன்னிலை வகித்தார்.

செயல் தலைவர் யூ.ஆர்.சபாபதி, அகில இந்திய தேர்தல் அறிக்கைக்குழு உறுப்பினர் சச்சின் ராவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மீனவர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் எவை எவை இடம்பெற வேண்டும்? என்று கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டனர்.  இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள பல்வேறு மீனவர் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, கட்சத்தீவு அருகே தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை வாங்கி தருவது, தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது, மீனவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 முன்னதாக சச்சின் ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக அறிந்து நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களுடைய எண்ணங்களில் உள்ள கோரிக்கைகள், ஆலோசனைகளை கேட்டறிந்து வருகிறோம். தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Katchatheevu ,Fishermen ,Congress , Congress Elections, Katchatheevu, Fishermen
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி