சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்ச ரூபாய் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். பட தயாரிப்புக்காக கஸ்தூரிராஜாவிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் ரஜினி, கஸ்தூரிராஜா கூட்டுச்சதி என போத்ரா குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி நடிகர் ரஜினி தாக்கல் செய்த மனுவில், பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, தன்னைபற்றி அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா, வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது என முறையிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரஜினி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கில் இன்று பிரதான மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி