×

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்...நாளை சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெறுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு நாளை (18ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் 8ம் தேதி தொடங்கியது. அது முதல் நம்பெருமாள் தினம் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பகல் பத்து நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று  நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். முன்னதாக காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மோகினி அலங்காரத்தில் பெண் வேடமிட்டு அழகுடன் கூடிய சக்தியாக முன் அழகும், பின் அழகும் ஒன்று போல் இருக்கும் சிறப்பு அலங்காரத்தில் காலை 7 மணி முதல் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மோகினி அலங்காரத்தை தரிசிப்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (18ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்படுகிறார்.

 அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் செல்கிறார். அதற்கு முன்னதாக, நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேதவிண்ணப்பங்களை கேட்டருளுகிறார். பின்னர் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.  அதுசமயம் அங்கு காத்து இருக்கும் பக்தர்கள் வெள்ளத்துடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரிணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியாக ஆலிநாடான் திருச்சுற்றில் உள்ள மணல்வெளி வழியே அகளங்கன் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 7 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு சென்ற பின்னர் அங்கிருந்தபடியே நள்ளிரவு வரை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.  சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.

4 ஆயிரம் போலீஸ் குவிப்பு: சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பு பணியில் திருச்சி மாநகர், புறநகர் உள்பட  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வெடிகுண்டு கண்டறியும்  நிபுணர்கள் மற்றும் போலீசார் தகுந்த கருவிகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் சுறறுப்புற பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaikunta Ekadasi ,festival ,Srirangam ,Nirvarmal ,Mohini , Srirangam temple, Vaikuntha Ekadasi festival, Mohini decoration, Nirrulumal, paradise opening
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...