சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவு எடுத்தால் மீண்டும் திறக்க முடியாது என்று கூறினார்.
ஆனால் தமிழக அரசு வேண்டுமென்றே வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வழிகளை திறந்து விட்டிருப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு இருக்கும் அதிகாரம் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி