அமராவதி: ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயலின் வேகம் அதிகரித்துள்ளதால், சூறைகாற்றுடன் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: பெய்ட்டி புயலானது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்து வருகிறது. மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த பெய்ட்டி புயல் தற்போது மணிக்கு 23 கி.மீ., வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. தற்போது புயல் சின்னமானது மசூலிப்பட்டினத்திற்கு 150 கி.மீ., தொலைவிலும், காக்கிநாடாவிற்கு 193 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 320 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று பிற்பகலில் காக்கிநாடா அருகே கரையை கடக்கும். சாதகமற்ற சூழ்நிலை காரணமாக புயல் கரையை கடப்பதற்கு முன் வலுவிழந்து கனமழை மற்றும் சூறைகாற்றுடன் கரையை கடக்கும். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கி.மீ., வீசக்கூடும். இது மணிக்கு 100 கி.மீ., வரை அதிகரிக்க கூடும். புயல் கரையை கடக்க உள்ளதால் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி