வேலூர்: மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் பெண்கள் சிறைகளில் காலியாக உள்ள துணை, உதவி ஜெயிலர் பணியிட பதவி உயர்வுக்கான நேர்காணல் சென்னையில் இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் இந்தாண்டு வேலூர், புழல், திருச்சி, கோவை, மதுரை ஆகிய 5 பெண்கள் சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் காலியாக உள்ள 6 துணை ஜெயிலர் பணியிடங்கள் மற்றும் 16 உதவி ஜெயிலர் பணியிடங்கள் என மொத்தம் 22 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
பதவி உயர்வுக்கான நேர்காணல் வேலூர் மத்திய சிறை வளாகத்தில் கடந்த நவம்பர் மாதம் 22, 23ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் கனமழை பெய்ததால் நேர்காணல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட துணை, உதவி ஜெயிலர் பதவி உயர்வுக்கான நேர்காணல் சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது. பதவி உயர்வுக்கான நேர்காணல் 5 சிறைத்துறை சரக டிஐஜிக்கள் தலைமையில் நடக்கிறது. இதற்காக சீனியாரிட்டி அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட உதவி ஜெயிலர், முதன்மை தலைமை காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் போது துப்பாக்கி கையாளுவது, சிறை நிர்வாகம், அணிவகுப்பு, கமாண்டிங், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி