பழநி: கடைகளுக்கு இடம் ஒதுக்கித் தரக்கோரி பழநியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சாலையோர வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சபரிமலை சீசனையொட்டி பழநி கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான தற்காலிக கடைகள் நடைபாதைகளில் போடப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கோயில் நிர்வாகம் சார்பில் கடந்தவார இறுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பழநி எம்எல்ஏ செந்தில்குமார் கலெக்டரிடம் வலியுறுத்தினார். எனினும், நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், பழநி கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்க் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி நிலையத்தில் தங்கி இருந்தார். இதையறிந்து 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அங்கு திரண்டனர். ஆனால், போலீசார், கட்சி நிர்வாகிகள் அமைச்சரை சந்திக்க அனுமதிக்கவில்லை.இதைத்தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சாலையோர வியாபாரிகள் முற்றுகையிட்டனர். சீசனை நம்பி சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன, எனவே. உரிய இடம் ஒதுக்கி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துவிட்டு சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி