×

ஐயப்ப பக்தர் தீக்குளித்த சம்பவம் : கேரளாவில் பாஜக முழு அடைப்பு போராட்டம்; பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில்  நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சபரிமலையில்  144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜ சார்பில் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த 3ம் தேதி பாஜ பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடந்த இரு தினங்களுக்கு முன்  அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு பதிலாக பாஜ தலைவர் பத்மநாபன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நேற்று  3வது நாளாக அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார். உண்ணாவிரத பந்தலில் அவருடன் பாஜவை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் பந்தலின் நேர் எதிரே உள்ள கட்டிடம் முன் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். இதை பார்த்த பாஜ தொண்டர்கள் கூக்குரலிட்டனர். இதைக்கேட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதற்கு முன்பு  அந்த நபர் தனது உடலில் தீவைத்துக் கொண்டார். போலீசார்  மற்றும் பாஜ தொண்டர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் திருவனந்தபுரம் முட்டடை பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் நாயர்(49) என தெரியவந்தது.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதற்கிடையே, ஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை செய்ததை தொடர்ந்து இன்று கேரளாவில் பந்த் போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் கேரளாவில் இன்று நடைபெற இருந்த பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayyappa ,shutdown ,Passengers ,BJP , Ayyappa devotee, Trivandrum, head office, the BJP, Kerala, complete blockage fight
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்