மதுரை: கஜா புயலில் சரிந்த மரங்களுக்கு குறைவான இழப்பீடு தருவதா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயல் பாதித்த நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மத்திய, மாநில அரசுகள் பாதிப்பை குறைத்து மதிப்பீடு செய்துள்ளன. உண்மையான இழப்பீடு பற்றிய தகவலை தரவில்லை. புயலில் சாய்ந்த மரத்திற்கான இழப்பீடு மிகவும் குறைவு. அதே நேரத்தில் 8 வழிச்சாலைக்காக ஒரு மரத்திற்கு 50 ஆயிரத்திற்கு மேல் தர சம்மதித்தனர்.
ஆனால் புயல் பாதிப்புக்கு இழப்பீட்டை அதிகரிக்க மறுக்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டுவதால், தமிழகம் மிகவும் பாதிப்படைந்து, பாலைவனமாகும். இது இரு மாநில பிரச்னை. அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் கர்நாடகா கலந்து ஆலோசனை செய்யவில்லை. காவிரி ஆணையத்தின் கருத்தையும் கேட்கவில்லை. சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வேலைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி