×

மொபட் மீது லாரி மோதி தாத்தா பலி; பேத்தி சீரியஸ் : பொதுமக்கள் சாலை மறியல்

எண்ணூர்: மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா பரிதாபமாக இறந்தார். பேத்தி படுகாயமடைந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60). இவர், நேற்று முன்தினம் இரவு தனது பேத்தி மேகாவுடன் (2) மொபட்டில் கடைக்கு புறப்பட்டார். எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்று, சக்திபுரத்தில் திரும்பியபோது, திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் நோக்கி வேகமாக வந்த லாரி, அவரது மொபட் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். குழந்தை மேகா, படுகாயமடைந்து உயிருக்கு போராடினாள். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் துடித்த மேகாவை மீட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், எண்ணூர் விரைவு சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, போக்குவரத்து போலீசார் பணம் வாங்கி கொண்டு கனரக வாகனங்களை இவ்வழியாக விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் காளிதாஸ் (47) என்பவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,grandfather , Lorry accident kills ,grandfather,mobot
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி