சென்னை: டிச.20-ம் தேதி ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. டிச.18-ம் தேதி அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உதவியாளர், கார் ஓட்டுநர், அவரது அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவன் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, சசிகலாவின் குடும்பத்தினர் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த 130 பேரும் அளித்த வாக்கு மூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கும், தமிழக உள்துறைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதேபோல் வருகிற 17ம் தேதி சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருகிற 18ம் தேதி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரை ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி