கோவை : கோவை புறகர் பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையை சுட்டுக்கொல்ல வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் கந்தசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை புறநகர் பகுதிகளான தடாகம், துடியலூர், சின்னத்தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்தில் இருந்து வெளியேறிய ஏராளமான யானைகள் திரிகின்றன. இதில் ஒற்றை யானை தாக்கியதில் வனத்துறை ஊழியர் உள்பட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அதனை சுட்டுகொல்ல வேண்டும். இதற்காக விவசாயிகளை திரட்டி சென்னை வன உயிரின முதன்மை காப்பாளர் அலுவலகத்தை 17ம் தேதி முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி