சென்னை: சென்னை ஆவடி, கவரப்பாளையம், பாலாஜி நகரில் கோவிந்தன் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வீடு மற்றும் இரும்பு வேலி அமைத்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் சென்றன. கலெக்டர் உத்தரவின்படி, ஆவடி தாசில்தார் சரவணன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் மனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், இரும்பு வேலி ஆகியவற்றை இடித்து, அப்புறப்படுத்தினர். இதன் மூலம் ரூ9 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மேலும், இனியும் ஏரியை ஆக்கிரமிப்பவர்கள் மீது போலீஸ், நீதிமன்றம் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி