அசோக்நகரில் மகளிர் விடுதியை 15 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் எங்கள் விடுதி குறித்து வந்ததில்லை. விடுதியில் தங்கியிருப்பவர்களின் பாதுகாப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு நாளாக நாளாக இதை ஒரு சேவையாகத்தான் நாங்கள் செய்து வருகிறோம். தரமான சாப்பாடு, தரமான சுகாதாரம், பாதுகாப்பு என இந்த மூன்றை மட்டும் முக்கியமாக கொண்டு தான் விடுதி நடத்தி வருகிறோம். எங்கள் விடுதியை மட்டும் சொல்லவில்லை இதைப்போன்று நல்ல முறையில் நடத்தக்கூடிய நிறைய பெண்கள் விடுதிகள் உள்ளன. தற்போது அரசு சில கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறது. நல்ல முறையில் விடுதி நடத்திவருபவர்களுக்கு இது போன்ற விதிமுறைகள் என்பது கடைபிடிப்பது நடைமுறையில் கஷ்டம். சற்று தளர்த்த வேண்டும். மாறாக தவறு செய்யும் விடுதிகளை கண்டுபிடித்து தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் வெளியூரில் இருந்து வரும் பெண்கள் புதிதாக மகளிர் விடுதியை தேர்வு செய்யும் போது அந்த ஏரியாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். விடுதியின் அருகே டாஸ்மாக் கடைகள் உள்ளதா? என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பஸ் வசதி, ரயில் வசதி, மருத்துவமனை உள்ளதா என்பது உட்பட தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். வெளியூரில் இருந்து வரும் பெண்கள் விடுதியை தாய்வீடு போன்று நினைக்க வேண்டும்; அதாவது தன்னுடைய தாய்வீட்டில் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்களோ அதைப்போன்று தான் விடுதியும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்கள் விடுதியை தேர்வு செய்யும் போது அந்த கட்டிடத்தில் மகளிர் விடுதி மட்டும் தான் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் அலுவலகம் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். விடுதி மட்டும் தான் இருக்க வேண்டும் வேறு ஏதேனும் அலுவலகம் இருந்தால் அந்த விடுதி சரிவராது.
எங்களுடைய விடுதியை பொறுத்தவரை கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. விடியற்காலை 5 மணிக்கு பிறகு தான் வெளியில் செல்ல வேண்டும். அதைப் போன்று இரவு 10 மணிக்குள் விடுதிக்குள் வரவேண்டும். தாமதமாக வருபவர்கள் என்ன காரணம் கூறினாலும் விடுதிக்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். அதனால் இரவில் பணிபுரியும் பெண்கள் யாரும் எங்கள் விடுதியில் இல்லை அவர்களின் பாதுகாப்பு கருதி, மேலும் 24 மணிநேரம் செக்யூரிட்டி நியமிக்கப்பட்டு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று கண்காணிக்கப்படுகிறது. மேலும் விடுதியில் இருப்பவர்கள் ஊருக்கு போவதாக இருந்தால் லீவு லட்டரில் போகும் நேரம், வரும் நேரம், போகும் இடம், எங்கு போகிறார்கள் அவர்களுடைய தொடர்பு எண் ஆகியவற்றை என்னிடம் முதலில் கூறிவிட்டு அனுமதி பெற்ற பிறகு லீவு லெட்டர் கொடுத்து தான் போக வேண்டும். அது போக அலுவலகம், கல்லூரி இல்லாத நாட்களில் கோவிலுக்கோ, சினிமாவுக்கோ போகிறவர்கள் அவுட்டிங் ரிஜிஸ்டரில் என்ன காரணத்திற்காக வெளியில் போகிறார்கள், போகும் நேரத்தை குறிப்பிட வேண்டும். வரும் போது செக்யூரிட்டியிடம் அதை காண்பித்த பிறகு தான் விடுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.இது போன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் பெண்கள் பயம் என்ற வார்த்தையை அகராதியில் இருக்க கூடாது. ஆபத்து வரும் முன்பு அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு தான் வர வேண்டும் பயப்படக்கூடாது. மேலும் தவறான முறையில் விடுதி நடத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தவறு செய்யும் விடுதிகளை கண்டுபிடித்து தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி