×

ஆணவ கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்: பறை இசை கலைஞரை மணந்தார்

கோவை: ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு கோவையில் இன்று மறுமணம் நடந்தது. பறை இசை கலைஞரை அவர் மணந்தார்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுசல்யா(21). இவர் கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருவரும் உடுமலை குமரமங்கலத்தில் உள்ள சங்கரின் வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவும், அவரின் கணவர் சங்கரும் உடுமலை பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, அவர்களின் மீது  கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில், படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் காயமடைந்து இருந்த கவுசல்யா மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சங்கர் கொலை தொடர்பாக கவுசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி, அன்னலட்சுமி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2017ல் நீதிபதி அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேரை விடுவித்தனர். மீதமிருந்த 9 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இச்சம்பவத்தை ெதாடர்ந்து எங்கெல்லாம் ஆணவ கொலை நடக்கிறதோ அங்கு முதல் ஆளாக கவுசல்யா சென்றுவிடுவார். சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதனை நடத்தி வருகிறார்.

சாதி ஒழிப்பு போராளியாக வலம் வந்து கொண்டிருக்கும் உடுமலை கவுசல்யா, இன்று கோவையை சேர்ந்த பறை இசைக்கலைஞர் சக்தி என்ற சத்தியநாராயணன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில்  தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் மறுமணம் நடந்தது.  இதில், திராவிடர் விடுதலை கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, வன்னி அரசு, எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், கவுசல்யா, சத்தியநாராயணன் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். சத்தியநாராயணன், நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரிடம் தான் கவுசல்யா பறை இசைக் கலையை கற்றார். இந்த திருமணத்தில் தம்பதி இருவரும் பறை இசை முழங்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kausalya ,Udumalai Shankar ,drum musician , Audu Kala, Udumalai Sankar, Kausalya, remarried, drum music artist
× RELATED ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்...