×

கஞ்சாவின் புகலிடமாக மாறிய வேலூர் மாநகரம் போதையில் தள்ளாடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்: வாட்ஸ் அப் நெட்வொர்க் மூலம் வியாபாரம் செய்யும் அவலம்

வேலூர்: வேலூர் மாநகரில் வேலூர் நகரம், காட்பாடி பகுதிகளில் நவீன தகவல் தொடர்பு நெட்வொர்க் மூலம் கஞ்சா உட்பட போதை பொருள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகளவில்  புழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகிறது. அதாவது போதை ஏற்றிக் கொள்வதற்காகவும், சிலரால் பொழுது போக்கிற்காகவும்  உட்கொள்கின்றனர். இந்த போதை பொருட்களில் மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்சுலின் என பல வகைகள் உள்ளன.  வேலூர் மாநகரில் கஸ்பா, கோட்டை சுற்றுச்சாலை, டவுன் ரயில்வே கேட், ஓல்டு டவுன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா மொத்தமாக விற்பனைக்கு வாங்கப்படுகிறது. கஞ்சாவை 10  முதல் 15, 25, 50 கிராம் என நான்கு விதமாக பொட்டலமாக்கி எடைக்கு ஏற்றார்போல் ₹50 முதல் ₹300 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகிலேயே இந்த விற்பனை  அமோகமாக நடக்கிறது. இத்தகைய கஞ்சா ஆசாமிகள் குறித்து உள்ளூர் போலீசார் முதல் போதை தடுப்பு போலீசார் வரை நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஞ்சா விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மாதம் ஒரு பெரிய தொகையை ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனுக்கும் கொடுத்து  விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து கஞ்சா ஆசாமிகளிடமே போட்டு கொடுப்பதாகவும்  வேதனை தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஓல்டுடவுனில் கஞ்சா பேர்வழிகள் குறித்து போலீசாருக்கு தொடர்ந்து தகவல் தந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையானவர் குறித்து கஞ்சா ஆசாமிகளிடமே போட்டு  கொடுத்ததால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. இதுதவிர அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதம் ஒரு வழக்கிற்கு கஞ்சா வியாபாரிகளே,  கஞ்சாவுடன் கைது ஆவதற்கு ஆட்களை கொடுப்பதால் போலீசுக்கு எவ்வித சிரமமும் இல்லை என்று போலீசாரே ஒப்புக் கொள்கின்றனர்.வேலூரில் மட்டும் இவ்வாறு தினமும் 5 கிலோ வரை கஞ்சா விற்பனையாவதாக கூறப்படுகிறது. வேலூரில், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதால், ஆந்திராவை சேர்ந்த முக்கிய  ஆசாமிகள் ரயில் மூலம் கஞ்சாவை வேலூருக்கு கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து இங்குள்ளவர்கள் கஞ்சாவை வாங்கி மலைப்பகுதிகளில் அரைத்து தூளாக்கி சிறு  பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்கின்றனர். காலையில் தொடங்கும் விற்பனை இரவு வரை வெகு ஜோராக நடக்கிறது.இதேபோல் காட்பாடியில் ரயில் நிலையத்தின் அருகிலும்,  பகுதியிலும் ஆந்திராவை சேர்ந்த ஆசாமிகள் முகாமிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை  சப்ளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு போதை பொருளுக்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர் சமூக விரோதிகள். அதாவது, பல இடைத்தரகர்களை வைத்து  கொண்டு வாட்ஸ் அப் நெட்வொர்க் மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து  வருகின்றனர். மேலும் பலர் சாலை ஓரங்களில் பெட்டி கடைகள் வைத்து கொண்டு பல மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிந்தாலும் அதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவிகள், இளைஞர்களின் எதிர்காலத்தை  கருத்தில் கொண்டு கஞ்சா விற்பனையை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore City ,school ,Ganja ,college students , Vellore City, Ganja, is teaching school,college students,Vats-Up Network
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்