×

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் தகராறு : 2 மகள்களை கொன்று தந்தை தலைமறைவு

கோவை: கோவையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், 2 குழந்தைகளை கழுத்து நெரித்து கொன்ற தந்தை தப்பி ஓடினார். இவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
 கோவை மசக்காளிபாளையம் அருகேயுள்ள நீலிக்கோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (47). தனியார் மார்க்கெட்டிங் நிறுவன மேலாளர். இவர் மனைவி செல்வராணி (43). இவர்களுக்கு ஹேமாவர்ஷினி (15), ஜா (8) என இரு மகள் இருந்தனர். இருவரும் 10-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 3 ஆண்டிற்கு முன் ெசல்வராணிக்கு பக்கவாதம் வந்தது. இதில் ஒரு கை, கால் அவருக்கு செயல் இழந்தது. இதனால் அவரால் நடக்க முடியாதது. பத்மநாபனிற்கு மது பழக்கம் உள்ளது. தினமும் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.   

நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு மனைவியிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று  போதையில் இருந்த பத்மநாபனை எச்சரித்தனர். அவர் மனைவியை மீண்டும் அடித்து தாக்க வாய்ப்புள்ளதாக நினைத்த போலீசார், செல்வராணியை வெள்ளலூரில் உள்ள தனது அக்கா கவுசல்யா வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். பத்மநாபன் வீட்டின் அருகே அவரது தாய் பத்மா வீடு உள்ளது.

பத்மாவை வரவழைத்து, குழந்தைகளை பார்த்து கொள்ள அறுவுறுத்திவிட்டு சென்றனர். போலீசார் சென்றவுடன் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பத்மாவை பத்மநாபன் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார். இந்தநிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு மகன் வீட்டுக்கு பத்மா சென்று கதவை தட்டியபோது வீட்டில் இருந்து வெளியே வந்த பத்மநாபன் அவசரமாக பைக்கை எடுத்து கொண்டு ெசன்றுவிட்டார். கட்டிலில் ஹேமாவர்ஷினி, ஜா இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பத்மா கூச்சலிட்டு கதறினார். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் சென்று, சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.  பத்மநாபன் தனது இரு மகள்களையும் தலையணை வைத்து முகத்தை அழுத்தி மூச்சை திணறடித்து கொலை செய்ததாக தெரிகிறது. பத்மநாபன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இவரை தேடி தனிப்படையினர் சேலம் விரைந்துள்ளனர்.

‘அப்பா செத்துருவாரு’... கதறிய மகள்கள்

பத்மநாபன் தனது மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த போது சிங்காநல்லூர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது ஹேமாவர்சினி, ₹ஜா ஆகியோரை தாயுடன் செல்லுமாறு போலீசார் கூறினர். அப்போது இரு மகள்களும், ‘‘எங்க அப்பா ரொம்ப நல்லவரு, எங்கள இதுவரைக்கு அடிச்சதே இல்ல சார், நாங்க போயிட்டா அவர் தற்கொலை பண்ணி செத்துருவாரு, அவர விட்டு நாங்க போகமாட்டோம், அவர் கூட தான் இருப்போம், அம்மா போனா போகட்டும்’’ எனக்கூறியுள்ளனர். இரு மகள்களும் தந்தைக்கு ஆதரவாக பாசமாக பேசியதால் போலீசாரும் வேறு வழியின்றி அம்மாவுடன் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை. மகள்கள் தாயுடன் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள் என தெரியவந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : daughters , Stroke, murder of daughters, father, addictive
× RELATED விஷக்கிழங்கு சாப்பிட்ட தொழிலாளி சாவு