சென்னை: ‘நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள முத்தொரையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு முடிவு செய்திருப்பதை கைவிட வேண்டும்’ என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் ஊட்டி முத்தொரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆகிய இரு இடங்களில் தான் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டால் ஜலந்தரில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்துதான் விதை உருளைக்கிழங்குகளை விவசாயிகள் வாங்கி வர வேண்டியிருக்கும்.
அங்கு உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள், தமிழ்நாட்டில் பயிரிட ஏற்றதாக இருக்காது. இத்தகைய சூழலில் ஊட்டி ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டால், தமிழகத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தாலும் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இழப்பு ஏற்படும். மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்து, தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்கள், குறிப்பாக வேளாண் நிறுவனங்கள் திட்டமிட்டு மூடப்படுகின்றன. உருளை ஆராய்ச்சி நிறுவனத்தையும் மூடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி