வாஷிங்டன் : நீண்ட காலமாக பரிசோதனையில் இருந்த தானியங்கி கார் சேவை அமெரிக்காவில் தற்போது அறிமுகமாகி உள்ளது. ஓட்டுனரே இல்லாமல் தானாக இயங்கும் இந்த காருக்கு வரவேற்பு கிடைத்தாலும் பாதுகாப்பு விவகாரத்தில் முழுமையான திருப்தி ஏற்பட வில்லை என்ற கருத்தே பரவலாக காணப்படுகிறது. அமெரிக்காவில் புதுமையான பயண அனுபவத்தை கொடுக்கும் வகையில் களம் இறங்கி இருக்கிறது ஆல்பாப்ட் நிறுவனம். வேமொ என்ற பெயரில் இந்நிறுவனம் தானியங்கி கார்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
தானாக கார் இயங்குவது மட்டுமின்றி பயண தூரத்திற்கான கட்டணத்தையும் இந்த காரே தன்னிச்சையாக வசூலித்து கொள்ளும். முதற்கட்டமாக அமெரிக்காவின் Phoenix புறநகர் பகுதிகளில் இந்த தானியங்கி கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் தானியங்கி சேவைக்கான தொழில்நுட்பங்கள் இந்த நகரங்களில் தான் பரிசோதிக்கப்பட்டன. எனவே இந்த நகரங்களின் அனைத்து பகுதிகளுக்கான தகவல்கள் அனைத்தும் தானியங்கி கார்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை வைத்து விபத்து இல்லா பயணத்தை இந்த கார்கள் தொடர்கின்றன. எங்கு சிக்னல் இருக்கிறது, எந்த இடத்தில் போக்குவரத்து அதிகம் என்ற விவரங்கள் காரில் இருக்கும் தொடுத்திரையில் தெரிகின்றது.
அதை வைத்து கார் தன்னிச்சையாக செயல்படுகிறது. பயணிகளும் அந்த தொடுதிரையை பார்த்து கொண்டே பயணத்தை தொடரலாம். தானியங்கி முறையில் கார்கள் இயங்கினாலும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஓட்டுநர் ஒருவரும் இந்த காரில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.அவசர காலத்தில் மட்டும் அவர் காரின் இயக்கத்தை தன்வசம் படுத்திக் கொள்வார். இந்த காரில் பயணம் செய்து கொள்ள விரும்புவார்கள் முதலில் வேமொ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் பயணம் செய்வதற்கான தூரத்தை பதிவிட்டு அதற்கான தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திவிட்டால் போதும். தானியங்கி காரில் பயணம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தயாராகிவிடும். சாதாரண கால் டாக்சியை விட கூடுதலாக இந்த காரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர சீரான வேகம், பாதுகாப்பு என பல அம்சங்கள் வரவேற்கும் நிலையில் இருப்பதால் பயணிகள் இந்த காரை பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் பயண பாதுகாப்பு விவகாரத்தில் முழு திருப்தியை எட்ட மேலும் சில ஆண்டுகள் பிடிக்கலாம் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி