வில்லியனூர்: வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வருவாய் துறை துணை தாசில்தார் நித்யானந்தம் தலைமையில் சுழற்சி முறையில் துணை தாசில்தார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வில்லியனூர் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றின் நடுவே மாட்டு வண்டியில் சிலர் மணல் அள்ளுவதாக கவர்னர் மாளிகையில் உள்ள 1031 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் வந்தது.
இதையடுத்து துணை தாசில்தார் நித்தியானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஆற்றின் நடுவே மாட்டுவண்டிகளை நிறுத்தி நீரில் மூழ்கி மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது அந்த மணல் கொள்ளையர்கள் துணை தாசில்தாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து தண்ணீரின் நடுவே இருந்த மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பாரத், பிரகாஷ், கோபி, சின்னத்தம்பி ஆகியோர் மீது துணை தாசில்தார் நித்யானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி