கம்பம்: கம்பம்-மெட்டு மாநில நெடுஞ்சாலையில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஜீப்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கேரளாவிற்கு தினந்தோறும் கம்பம், தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை, சின்னமனூர், சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிகொண்டு நூற்றுக்கணக்கான ஜீப்கள் செல்கின்றன. இந்த ஜீப்களில் மோட்டார் வாகன விதிமுறைகள் மீறப்படுவதாகவும், அதிகமான தொழிலாளர்களை ஏற்றிச்செல்வதாகவும் புகார்கள் பறந்தன. இதனை பற்றி தினகரனில் செய்தி வெளியானது. இதனை அடுத்து உத்தமபாளையம் பகுதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் 100க்கும் மேற்பட்ட ஜீப்களை சோதனை செய்தனர்.
இதில் சீட்பெல்ட் அணியாமல் சென்றது, லைசென்ஸ் இல்லாமை, அதிகமான வேகம், அதிக தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 15க்கும் மேற்பட்ட ஜீப்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.18 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட ஜீப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மோட்டார் வாகன விதிகளை மீறி அதிகமான வேகம், பயணிகளை அதிகமாக ஏற்றிச்செல்வது போன்றவை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவையாக உள்ளதால் இனிமேல் தமிழககேரளா சாலைகளில் அதிகமான வாகன சோதனை நடத்திட முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி