சென்னை: தமிழகத்தின் 174 பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்த விவசாயி நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நெல் ஜெயராமன். இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாருடன் இணைந்து விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் இவர் ஈடுபட்டிருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை தேடித் தேடி சேகரித்து பாதுகாத்தார்.
பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் விதைகள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்தது.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் நேற்று வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைத்துறையினர், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று சொந்த ஊரில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி