சென்னை : ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 3ம் தேதி வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, ரா.முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் 7 பேருக்கும் தனித்தனியே கோப்புகள் தயார் செய்து பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக வைகோ குற்றம் சாட்டினார்.
மேலும் ஆளுநர் மாளிகை அருகே உள்ள சின்னமலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே தடையை மீறி போராட்டம் நடத்திய அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 687 பேர் மீது சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி