×

சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நீட்டித்து முக்கிய விவாதங்கள் நடத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நாளை மாலை கூட உள்ள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீடித்து, முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதங்க்ள நடத்தி, அதன் நிறைவாக உரிய தீர்மானங்கள் - சட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியிருப்பதாவது: மேகேதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இது சரியான நடவடிக்கை என்றாலும் கூட, மாலையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க போதிய நேரம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணைய அனுமதி பெற்றுத்தந்ததன் மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது. மேகதாட்டு அணை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் கனவை கர்நாடகம் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மேகேதாட்டு அணை குறித்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவும், அனுமதியை திரும்பப்பெறும்படி வலியுறுத்தவும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் உதவும். ஆனால், காவிரி சிக்கல் மட்டுமின்றி, கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த ஏராளமான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், சில மணி நேரங்கள் மட்டும் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. மாலை 4.00 மணிக்கு தொடங்கும் பேரவைக் கூட்டத்தை அதிகபட்சமாக இரவு 8.00 மணி வரை நடத்த முடியும். தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள் குறித்து 4.00 மணி நேரத்தில் எத்தகைய விவாதங்களை நடத்த முடியும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுக்க இப்போதும் வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து அறிவிப்பதாகும். இரண்டாவது, தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது ஆகும். நாளை மாலை நடைபெறவுள்ள பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும். எனவே, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். அதில் மேகேதாட்டு அணை விவகாரம், கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராமதாஸ் அறிக்கையின் மூலம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Legislative Assembly ,discussions ,Ramadoss , PMK Founder, Ramadoss, Framework, Special Meeting
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...