ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கஜா புயலை அடுத்து அரசு மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி மீன்களை பிடிக்கும் திருட்டு கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். வைகை அணையின் நீர்தேக்கப் பகுதி சுமார் 10 சதுர மையில் பரப்பளவு கொண்டுள்ளது. அணை பகுதியிலேயே மாவட்டத்தின் மீன்வளர்ப்புத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் பவானிசாகர் அணையிலிருந்து 10 லட்சம் மிருகால், ஜிலேபி, கென்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவ்வாறு கொள்முதல் செய்த மீன் குஞ்சுகளை இங்குள்ள மீன்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பருவத்திற்கு வந்தவுடன் நீர்தேக்கப் பகுதியில் விடுகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ளவர்களும் மீன்குஞ்சுகளை வாங்கி செல்கின்றனர்.
இதனையடுத்து இங்குள்ள மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலமாக மீன்கள் பிடிக்கப்பட்டு வெளிசந்தைகளில் விற்பனை செய்து அதில் வரும் தொகையை அரசுக்கு 50 சதவீதம் மற்றும் மீனவர்களுக்கு 50 சதவீதம் என்று பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால் கஜா புயலின் தாக்கத்திற்கு பின் வைகை அணை பகுதியில் மீன் பிடிக்க தடை உத்தரவை மீன் வளர்ப்பு துறையினர் பிறப்பித்துள்ளனர்.
ஆனால் இதையும் மீறி வைகை அணைக்கு உட்பட்ட நீர்நிலைகளில் அதிக அளவில் திருட்டு மீன்களை அதிகாரிகளின் துணையோடு பிடித்து வருவதாகவும், இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மற்றும் மீன் திருடும் கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வைகை அணை மீனவர் சங்கத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, மீன் திருட்டு கும்பலை பிடிக்குமாறும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி