சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி காஞ்சனா.. கர்ப்பிணியான இவர் கடந்த 28ம் தேதி விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அப்போது, காஞ்சனாவை பரிசோதனை செய்த டாக்டர் விஜயசித்ரா, முழுமையான வலி வரும் வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறி உள்ளார். பின்னர், மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது விஜயசித்ரா பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பணியில் இருந்த செவிலியர் சுகன்யா என்பவர், தனியாக பிரசவம் பார்த்துள்ளார். அதில், குழந்தை முழுமையாக வெளியே வராமல் தலை மட்டும் வெளியே வந்து நின்றுள்ளது. இதனால் பயந்துபோன செவிலியர் சுகன்யா, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு காஞ்சனாவை அனுப்பியுள்ளார். ஆனால் அங்கும் மருத்துவர்கள் இல்லை.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் குழந்தையும், தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில், இதுதொடர்பான செய்தியை நாளிதழில் பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் டாக்டர் மற்றும் செவிலியர் ஈடுபட்டது மனித உரிமை மீறல் ஆகாதா, அவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி