வருசநாடு: வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு சாலை வசதியில்லாததால் 5 கி.மீ தூரம் நடந்தே மாணவர்கள் பள்ளி செல்லும் அவலநிலை தொடர்கிறது. வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தூத்து. இங்கு இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், எலுமிச்சை, அவரைக்காய் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பயிர்கள் தேனி, மதுரை, கம்பம், திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஒவ்வொரு நாளும் பயிர்களை மாட்டுவண்டிகள், டூவீலர் மற்றும் தலைச்சுமையாக விவசாயிகள் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூலி ஆட்களின் செலவுகள் அதிகமாகிறது.
மேலும் சாலவசதியில்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் ஒவ்வொரு நாளும் வருசநாடு, கீழபூசணியூத்து, சிங்கராஜபுரம் போன்ற கிராமங்களில் தினமும் சுமார் 5 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நல்லுசாமி கூறுகையில், எங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி நீண்ட காலமாக இல்லாமல் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக்கூட வருசநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தொட்டில் கட்டி தூக்கி சொல்லும் நிலையில் தான் இன்றளவும் உள்ளோம். எனவே, உடனே தேனி மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி