சென்னை: வண்டலூர் அருகே தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரவுடி உடல் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் விஜிபி திடல் உள்ளது. அங்கு சாலையோரத்தில் டாடா சுமோ கார் ஒன்று ரத்தக் கரையுடன் நிற்பதாக வண்டலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்தனர்.
காரில் ரத்தக்கரை இருந்ததால் கொலை செய்யப்பட்டது யார் என்று போலீசார் ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி உள்பட சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் விஜிபி திடலில் ரவுடி ஸ்ரீதர் உடல் முகம், தலை சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்தது. பிரேதபரிசோதனைக்காக உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணையில், ரவுடி ஸ்ரீதர் ஊரப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக பிரமுகர் பெருமாளை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஸ்ரீதர் கொலை தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அந்த காரில் 2 பேர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த 2வது நபர் ஸ்ரீதரின் நண்பரா அல்லது கூட்டாளியா என போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர். இதனால் ஊரப்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார் யாருடையது?
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளின் உறவினருடையது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முன்பகை காரணமாக பெருமாளின் உறவினர்கள் கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை தொடர்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி